சமீபத்தில் இந்தியாவுக்கு இரண்டு வார ட்ரிப் அடித்தேன். சான்ஃபிரான்சிஸ்கோவில் இருந்து துபாய் வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்த அமெரிக்கப் பெண் வேலரி வாஹ்னர், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, நேராக இந்தியாவுக்கு வந்துவிட்டார். பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாக வாழும் வேலரி, இப்போது ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. வேலரியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, தேச, மொழி எல்லைகளைக் கடந்து உலகம் சுருங்கிவருவது தெளிவாகப் புலப்பட்டது. சில பல ஆண்டுகளுக்கு முன் (குறிப்பாக, இணையம் பிரமாண்டமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்) மேற்கு நோக்கிப் பயணித்த நாளின் நினைவு அப்படியே இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் புவிக் கோளத்தின் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமற்றுப்போய், என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியமானதாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் டாம் ஃப்ரீட்மேன் எழுதிய 'தி வேர்ல்டு இஸ் ஃப்ளாட்’ புத்தகத்தில் 'எதிர்காலத்தில், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், பல துறைகளின் வேலைகளுக்குச் சம்பளம் சமமாகவே இருக்கும். யார் அதிகத் தரத்துடன் வேலை செய்கிறார்களோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்’ என்று படித்ததாக நினைவு. இது நடக்க அத்தனை தூரம் இல்லை எனத் தோன்றுகிறது.






